எங்க ஊரு பாளையம்

           தமிழ்நாட்டுல ஏகப்பட்டப் பாளையங்கள் இருக்கு. பாளையமுன்னு சொன்ன வுடனே தெரிஞ்சிக்கற மாதிரி எங்க ஊருப் பெத்தநாயக்கன் பாளையம், புத்திரக் கவுண்டன் பாளையம், கோபிசெட்டிப் பாளையம்  மாதிரிப் பெரிய பாளையம் எல்லாம் இல்லை.

     சிங்கம் மாதிரி சிங்கிளா (தனித்தன்மயோடப்) பாளையம். இப்பத்தைக்கு "வெறும்" பாளையமுன்னு வச்சுக்கிடுவோம்.  ஊரை  விட்டு வெளிய வந்து மொத்தமா ஒன்பது வருசமாச்சு. எனக்கு சொந்த ஊரிலேயே  வேலை கிடைக்கனும்கிரதுக்காக, எங்க ஊரப் பக்கம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை கட்டறதுக்கேல்லாம் எங்க ஊரு அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை. அவருக்கெல்லாம் பல சோலி இருக்குன்னு உங்க எல்லாருக்குமேத் தெரியும்.

         
     எங்க ஊரும் ஒரு முன்னாள் கிராமம். (Ex Village ). கிராமத்தோட எல்லா அடையாளங்களையும் கொஞ்சம் வேகமாத் தொலைச்சுக்கிட்டு வர்ற ஊரு. எங்கா ஊருப் பெரிசுகளுக்கு எல்லாம் பேரே விசித்திரமா இருக்கும்.புளுவன், காக்காயன், புட்டன், மண்ணுத்தின்னி, வைக்கக் கட்டி,காசிகரயான், குண்டுணி, பொரி உருண்ட,  குஞ்சு + (சாதிப்பெயர்),   , அவிங்க சொந்தப் பேரச் சொன்னாக்க ஒருத்தருக்கும் தெரியாது.  அதோட, அவுல்பட்டரைக்காறாரு, நெல்லுக்குத்தி, தேயூரன்,  குதுரக்காறாரு, கூட்டுவண்டி, கெண்டியாறு, வெள்ளையன், ன்னு பல பேர்களும் அதற்குப் பின்னால் சில சம்பவங்களும் இருக்கும்.

      சாமிங்களுக்கும் சரி,  கோவிலுக்கு ஒருப் பேரு இருக்கும். ஆனாக்க இவங்கக் கூப்பிடுறது வேறப் பேரா இருக்கும். ஏரிகரையான் , குன்னடியா, கோட்டையான், ஊமைத் தம்பு.  ஆலடியான், அப்புடின்னு சொல்லுவாங்க. எங்க ஊருல ஒரு பழைய, பெரிய  மாதாக் கோயிலும் அதோட பெரிய மணி சப்தமும்,  " ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்கள் அனைவரோடும் இருப்பாராக" (ராகமாக- ஒலிப் பெருக்கியில்)  என்கிற பாதிரியாரின் குரலும் அதைப் பின்தொடர்ந்த "உம்மோடும் இருப்பாராக" என்கிற குழுப் பிரார்த்தனையும் நீங்கா நினைவுகள்.அந்த மாதாக் கோவிலுடன் இணைந்து இருக்கிற  "R .C நடுநிலைப் பள்ளி" தான் எங்களுக்கு  Harvard, standford எல்லாமும்.  எங்க எல்லாருக்கும் பீதியக் கெளப்புன "ரோஸ்லின் மிஸ்" அங்கதான் இருந்தாங்க. அவுங்கப் பேரைக் கேட்டாலே அம்புட்டுப் பயம் வரும். கட்டுப் பாடானப் பள்ளிக்கூடமுன்னுப் பேரு  இருந்ததால, அஞ்சு கிலோமீட்டரு நடந்து வந்துப் படிச்சவுங்க  எல்லாம் உண்டு.

  யாராச்சும் நீ என்னப் படிக்கரன்னுக் கேட்டா "அழகுராசு நிலை- ஐந்து அ " அப்புடின்னு சொல்லுறது வழக்கம். அந்த ஐந்து அ பின்னாடி "ப்ளஸ்டூ ஏ 2 " அப்புறமாக் "கெமிகல் டிபாட்மன்ட்"  ஆகி இப்ப "எஸ் 1 யூனிட்  மென்"  ஆகி இருக்கு. கூடப் படிச்ச கி . செல்வராணி, பெ. செல்வராணி , டெஸ்டனிசு , டேனியல், சம்சுதீனு, ஜாஹீறு ,  டெல்பினா, பெனிட்டா எல்லாம் என்ன (வா) ஆனான்கன்னுத் தெரியல.

  அப்ப எங்களோட விருப்பமானத் தொலைகாட்சி நிகழ்ச்சி, ஒலியும் ஒளியும், சுட்டிப்பெண் அம்லு, சந்திரகாந்தா தொடர்கள். யாரு வீட்டுல படம் ஓடுதுன்னு தேடித் போயி கும்பலா ஒக்காந்துப் பார்ப்போம், வெள்ளிகிழமை சாயந்திரமா ஏழு மணிக்கு மழை பெஞ்சாக் கோவம் கோவமா வரும். 

      எங்க ஊருல சித்திரை மாசம் ஆச்சுன்னா, ரெண்டுத் திருவிழா நடக்கும். ஒன்னு மாரியாயித் தேரு, இன்னொன்னு, ஆரோக்கியமாதா  திருவிழா.  ரெண்டுமே பத்துப் பத்து நாள் தனித்தனியா நடக்கும் ராத்திரி எல்லாம் வீதிகள்ல  சப்பரமும், சகடயுமா வந்து போகும். 

    எங்களுக்கெல்லாம் திருவிழான்னாக்க ரொம்ப சந்தோசம். ஆட்டம் போடலாம். ஆனா அப்பா- த்தான் தேர்திருவிழான்னா, 300 ரூபா தேரு வரிக் கேப்பாங்கன்னு புலம்புவாறு. கடசியா எப்பத் தேர் திருவிழா நடந்ததுன்னுத் தெரியல. ஆனா திருவிழாவா எந்த சண்டையும் வராம முடிக்கரதுக்குள்ளப் ஊருக் காரியக் காரவங்க பாடு திண்டாட்டம்தான். 

  வருத்தம் என்னன்னா இப்ப கிராமங்கள்ல இருக்க மக்கள்கிட்ட முன்பு இருந்த அன்னியோன்யம், பாசம் இல்லை. நிறையப் பேரு ரொம்ப சுயநல வாதிகளா மாறிக்கிட்டு வர்றாங்க. கிராமங்களின் வளர்ச்சி நாட்டுக்கு மிக அவசியம் என்கிற போது, சில விசயங்கள சகிச்சிக்க வேண்டி இருக்கிறது. கிராமங்கள் நிறையத் தகவல் தொடர்பு வசதிகள் வந்துட்டதால ( குறிப்பாத்  தொலைகாட்சி, கைப்பேசி), ஒரு முக்கியமான நன்மை என்னன்னா.., இப்ப இலைமறை காய்மறையா இருந்து வர்ற சாதி  வேறுபாடுகள், மூடப் பழக்கங்கள் இன்னும் இரண்டுத் தலைமுறைக்கப்புறமா, சுத்தமா இருக்காதுன்னு நம்புறேன். 
          

Comments

  1. இயக்கம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

    ReplyDelete
  2. எங்க ஊரை பற்றியும்..
    http://theblossomingsoul.blogspot.com/2011/07/blog-post_06.html
    http://theblossomingsoul.blogspot.com/2011/07/blog-post_28.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நீதிமன்றத்தில் நாமே வாதாட - 2/2

நீதிமன்றத்தில் நாமே வாதாடுவதற்கு..1/2

போர்த் தொழில் பழகு (Porth thozhil pazhagu) (புத்தக விமர்சனம்) :