வருமான வரி ரிடர்ன் சமர்ப்பித்தல்
பொதுவாகவே, மாத சம்பளதாரர்கள் அல்லது நிரந்தர வைப்பு திட்டத்தில் சற்று அதிக பணம் சேமித்து வைத்திருப்பவர்களுக்கு TDS (ஆதார வரி பிடித்தம்) முறையில் எதிர்பார்க்கப் படும் ஆண்டு வருமானத்திற்கான வருமான வரி முன்கூட்டியே பிடிக்கப்படுகிறது. வேலை வழங்கும் நிறுவனம் மற்றும் சேவை வழங்கும் வங்கி ஆகியவை இவ்வாறு பிடித்தம் செய்து தகவல் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் Form 16A மற்றும் Form 26AS போன்றவை மூலம், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப் படுகின்றன. நாம் வரிச்சலுகை பெறுவதற்காக முதலீடுகள் செய்திருந்தாலோ, அல்லது நன்கொடைகள் வழங்கி இருந்தாலோ அதனைத் தெரிவித்து வரி செலுத்த வேண்டிய வருமானத் தொகையை குறைப்பதன் மூலம், குறைக்கப்பட்ட வருமானத்திற்காகவும் சேர்த்து பிடிக்கப் பட்ட TDS தொகையை திரும்பப் பெறுவதற்காகவே Income tax return பதிவு செய்கிறோம்.
தாக்கல் செய்வது எப்படி? :
ஓரளவு கணினியை இயக்கத் தெரிந்து, இணையத்தில் உலவத் தெரிந்தவர்களான, நேர்மையாக வரி செலுத்தும் மாத ஊதியதாரர்கள் தானாகவே ரிடர்ன் தாக்கல் செய்ய முடியும். இதனை செய்ய, நன்கொடை பெற்றவரின் PAN no தேவை. மேலும் மாதச் சம்பளத்தில் பிடித்தம் செய்திருந்தால் அதனை குறிப்பிட வேலை செய்யும் நிறுவனத்தின் TAN நம்பர் தேவை. இன்சூரன்சு பிரீமிய ஆதாரங்கள் கேட்கப் படுவது இல்லை. தொகையை குறிப்பிட்டால் போதுமானது. மேலும் வரிச்சலுகை பணத்தை திரும்பப் பெற வங்கி கணக்குஎண் மற்றும் IFSC Code no ஆகியவை தேவை.
எப்போது தாக்கல் செய்ய வேண்டும்?
நடப்பு மதிப்பீட்டு ஆண்டு முடிந்த பிறகு 4 மாதங்களில் (பின்வரும் ஜூலை மாதத்திற்குள்) தாக்கல் செய்யலாம். தவறினால் அடுத்த வருட மார்ச் மாதத்திற்குள் அபராதத் தொகையை சேர்த்து தாக்கல் செய்ய முடியும். மதிப்பீட்டு ஆண்டு என்பது ஏப்ரல் 1 ம் தேதி முதல் மார்ச் 31 வரை என்பது யாவரும் அறிந்ததே.
தவறு நிகழ்ந்தால் என்ன செய்யலாம்?
நேர்மையான பிழை என்கிற பட்சத்தில் 139(5) ன் கீழ் அதே மதிப்பீட்டு ஆண்டுக்கான திருந்திய கணக்கீட்டை தாக்கல் செய்ய முடியும். இதனைச் செய்ய முதலில் சமர்ப்பித்த படிவத்தின் ஒப்புகை எண் மற்றும் தேதி ஆகிய விபரங்கள் தேவை.
ஆகவே நமக்கு வரும் form 16, 26, Pay slip போன்றவற்றை 2 வருடங்களாவது பாதுகாத்து வைப்பது நலம்.
நாம் தாக்கல் செய்யும் வருமான வரி திருப்ப படிவங்களை சரி பார்த்து, கையொப்பமிட்டு CPC, Bangaluru அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அல்லது ஆதார் எண்ணோடு இணைக்கப் பட்ட கைப்பேசிஎண்ணில் ஒருமுறை கடவுச் சொல் பெற்று மின்-சரிபார்த்தல் செய்யலாம். 10 நிமிடத்தில் வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்து விட முடியும். குறிப்பிட்ட வரம்புக்குட்பட்ட வரி ரிடர்ன் படிவங்கள் வருமானவரித்துறையினரால் கடும் சோதனைகள் செய்யப் படுவது இல்லை. வரி செலுத்துவோரின் சிரமத்தை தவிர்க்கவே, இவ்வாறு பல்வேறு விசயங்கள் எளிமைப்படுத்தப் பட்டுள்ளன.
ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், கட்டணமில்லா தொலைபேசி எண் 18001030025 ஐ அழைத்து ஆங்கிலத்தில் உரையாடி தகவல் பெறலாம்.
அதிக வருமானம் பெறுவோர், வணிகர்கள் போன்றோர் ஒரு கணக்காளர் மூலம் இவற்றை செய்வது நல்லது.
வருமான வரி ரிடர்ன் தாக்கல் செய்வது ஒரு நல்ல குடிமகனின் கடமையும் கூட.
Comments
Post a Comment