திருப்பதி தரிசனமும் திட்டமிடலும்
தற்போது கொரோனா பிரச்சினை கிட்டத் தட்ட முடிவடைந்து உள்ள நிலையில், 2 ஆண்டுகளாக திருமலை பெருமாளை தரிசிக்க இயலாதவர்கள் அனைவரும் தற்போது செல்ல முயற்சிக்கிறோம்.
2-3 மாதங்களுக்கு முன்னரே இணைய தளம் மூலம், 300 ரூ டிக்கட் அல்லது சர்வ தரிசன டிக்கெட் எடுத்துக் கொள்வது நல்லது.
இப்படி இல்லாமல் திருமலை வந்தால் நேரடியாக 300 ரூ தரிசன டிக்கெட், சில வருடங்களாகவே வழங்கப் படுவது இல்லை. சர்வ தரிசன டிக்கட் ஆனது கீழ் திருப்பதியில் உள்ள சீனிவாச காம்ப்ளெகஸ்ல் மட்டுமே தரப் படுகிறது. அதற்கும் ஆதார் அட்டை காண்பிக்க வேண்டி உள்ளது.அப்படி தரிசன டிக்கெட் பெறும்போது, தரிசன நேரத்திற்கு 2 நாட்கள் இடைவெளி இருப்பதால் அந்த இரண்டு நாட்களும் அறை எடுத்து தங்கும் செலவு ஏற்படுகிறது.
திருமலையில் தனியார் தங்கும் விடுதிகளின் விலை மிகவும் அதிகம். தேவஸ்தான அறைகள் பெரும்பாலும் இணைய தளம் மூலமே பதிவு செய்யப் படுகிறது. நேரடி பதிவு மூலம் அறை கிடைப்பதும் சிரமம். CRO அலுவலகத்தில் மட்டுமே அனைத்து ரெஸ்ட் ஹவுஸ் களுக்கும் அறைகள் பதிவு செய்யப் படுகின்றன. அங்கு செல்வதற்கு இலவச பேருந்து வசதியை பயன்படுத்தலாம். இல்லையென்றால் கீழ் திருப்பதியிலீயே இரண்டு நாட்களையும் கழித்து விட்டு மேலே வந்தால் செலவைக் குறைக்கலாம்.
தமிழ் தெரிந்தவர்கள் உண்டு என்றாலும், அவர்கள் பலருக்கும் பதில் சொல்லி அலுத்துப் போயிருப்பார்கள் என்பதால், நமக்கு தேவையான பதில் கிடைக்காது.
ஆகவே, திருப்பதி வருவதற்கு ரயில் டிக்கெட் பதிவு செய்வதை விட, தரிசன டிக்கெட் மற்றும் திருமலையில் தங்கும் அறை பதிவு செய்வது மிகவும் முக்கியம். இவற்றைப்பதிவு செய்து விட்டால், பேருந்தில் கூட வந்து இங்கே ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.
சரியான திட்டமிடல் இல்லை என்றால் தரிசன வரிசைக்கு நுழையும் முன்பே களைத்துப் போய் விடுவோம்.
Comments
Post a Comment